புதுடெல்லி : நாடு முழுவதும் 1400 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 900 ஐ.பி.எஸ் அதிகாரிப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது சம்பந்மாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிட்டேந்திர சிங் எழுத்துப் பூர்வ பதிலைக் கூறியுள்ளார். அதில் இந்தியா முழுவதும் 6396 ஐ.ஏ.எஸ் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
4926 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நாடு முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார். 1470 ஐ-ஏ.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன என கூறியுள்ளார்.
ஐ.ஏ.எஸ் காலியிடங்கள்
பீகார் மாநிலத்தில் 128 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடங்களும், உத்திரப் பிரதேச மாநிலத்தில் 117 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடங்களும், மேற்கு வங்க மாநிலத்தில் 101 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடங்களும் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐ.பி.எஸ் பணிக்கு 4802 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 3894 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். 908 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எஸ் காலியிடங்கள்
பீகார் மாநிலத்தில் 231 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடங்களும், உத்திரப் பிரதேச மாநிலத்தில் 114 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடங்களும், மேற்கு வங்க மாநிலத்தில் 88 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடங்களும், கர்நாடகாவில் 72 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடங்களும், ஒடிசாவில் 79 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடங்களும் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்திய வனப் பணி (ஐ.எப்.எஸ்) அதிகாரிகள் பணிக்கு 3157 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 2597 வனப் பணி அதிகாரிகள் பணியில் உள்ளனர். 560 வனப் பணி அதிகாரிகள் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எப்.எஸ் காலியிடங்கள்:
மகாராஷ்டிராவில் 46 ஐ.எப்.எஸ் அதிகாரிப் பணியிடங்களும், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் 45 ஐ.எப்.எஸ் அதிகாரிப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 180 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 110 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மற்றும் 150 ஐ.பி.எஸ் அதிகாரிகள் 2015 மற்றும் 2009 வருடம் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நிரப்பப்படும்
மேலும், பதவி உயர்வு ஒதுக்கீட்டில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், அகில இந்திய சேவைகள், மாநில சேவை அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகள் தேர்வு மூலம் விரைவில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படுவதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன் மூலம் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.