உடனடியாக படித்த பிள்ளைகளுக்கு வேலை வேண்டும் என்றால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத வேண்டும். மக்கள் அதிகம் படித்ததால் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் செட்டிநாயக்கன் பட்டியில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் பேசுகையில், "எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரிகள், மாவட்ட ஆட்சியரிடம் அப்போதெல்லாம் மகன், மகள் பெரிய படிப்பு 10 படித்துள்ளனர் என்று கூறுவார்கள்.
இப்போதெல்லாம், எங்கு பார்த்தாலும் படிப்பு, கல்வி அறிவு அதிகமாகிவிட்டது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்னும் 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் படித்ததால் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் என் மகள் இன்ஜினியர், மகன் இன்ஜினியர் படிப்பு முடித்து உள்ளனர் என்று சொல்லி வருகின்றனர்.
உடனே படித்த பிள்ளைகளுக்கு வேலை வேண்டும் என்றால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத தயாராகுங்கள். அதில் தேர்வு எழுதி பாஸ் ஆகிவிட்டால் யாருடைய தயவும் தேவை இல்லை. 1 பைசா லஞ்சம் கொடுக்காமல் பெற்ற அறிவின் மூலம் வேலை உங்கள் வீடு தேடி வரும்.
கடந்த காலங்களில் 30 வயது 40 வயது உடையவர்களுக்கு தவறாக ஓய்வூதியம் வாரி வழங்கப்பட்டுள்ளது. அதை சரி செய்து விசாரணை செய்து சரியாக இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
60 வயது வந்தவர்கள் எங்களுக்கு உதவி தொகை தாருங்கள் என வருகின்றனர். சில இடங்களில் தவறாக 30 வயது 40 வயது உள்ளவர்களுக்கு போன காலங்களில் முதியோர் பென்சன் கொடுத்து விட்டார்கள். உண்மையான முதியவர்களுக்கு கொடுக்க முடியவில்லை.
ஒரு கிராமத்துக்கு சென்று விட்டால் 100 பேர் வந்து விடுகின்றனர். எனவே மாவட்ட வருவாய் துறையினர் மாவட்ட ஆட்சித் தலைவர் தனியாக வந்து விசாரணை செய்து சரியாக இருந்தால் ஓய்வூதியம் தரப்படுகிறது". இவ்வாறு அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications












