சென்னை : கல்வி கட்டண கமிட்டி தமிழகத்தில் சுயநிதி மருததுவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இந்த கமிட்டி 3 வருடத்திற்கு ஒரு முறை கல்வி கட்டணத்தை மாற்றி அமைக்கும் அதன்படி இந்த ஆண்டு தனியார் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர்கள் கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த்னர். இதையொட்டி கமிட்டி ஆய்வு செய்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கல்வி கட்டணத்தை மாற்றி அமைத்து இருக்கிறது.
இன்று முதல் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல்மருத்துவக் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணத்தில் மாற்றம் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு ரூ. 13 ஆயிரத்து 600 மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டணம் ரூ. 11 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும்.
அதே நேரம் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ. 3 1/2 லட்சம் முதல் 4 1/2 லட்சம் வரை (முந்தைய கட்டணம் ரூ. 2 1/2 லட்சம் முதல் ரூ. 3 1/2 லட்சம்) பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ. 2 1/2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுய நிதி பல் மருத்துவக்கல்லூரிகளுக்கு ரூ. 6 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கிட்டு இடங்களுக்கும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம் இன்று விண்ணப்பம் பெறுவோருக்கு தெரிந்துவிடும். அதாவது விளக்க குறிப்பேட்டில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.