சென்னை : என்ஜினீயரிங் படிப்பிற்கு மே 1ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்து. அதனைத் தொடர்ந்து நான்கு நாட்களில் 21,223 பேர் விண்ணப்பித்துள்ளனர். நான்காவது நாளாகிய நேற்று மட்டும் 5,150 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. பி.டெக் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்வதற்கு எந்தவித நுழைவுத் தேர்வும் கிடையாது. 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மே 1ந் தேதி முதல் மே 31ந் தேதி வரை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது.
மே 12ந் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள்வெளிவருகின்றன. அதன் பிறகு மாணவ மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும்.
கடந்த ஆண்டு நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 500க்கு டி.டி. எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து (நகல்கள்) அணணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.