கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் காலியாக உள்ள 549 துப்புரவு பணியிடங்களுக்கான நேர்காணல் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்தது. இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கான நேர்காணலில் 549 துப்புரவு பணியாளர் வேலைக்கு பி.இ., பி.டெக்., ஏரோ நாட்டிக்கல் என என்ஜினியர்கள் உள்பட 7000 பட்டதாரிகள் விண்ணப்பம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சுமார் 2 ஆயிரம் நிரந்தர துப்புரவு பணியாளர்களும், 1,500 மேற்பட்ட ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தரத் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எழுத, படிக்கத் தெரிந்தால் ரூ.50 ஆயிரம்
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் மட்டுமே போதும் எனவும், இதற்காக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
நேர்முகத் தேர்வு
அதன்படி, கடந்த நவம்பர் 27 மற்றும் 28 என இரு நாட்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்க வந்த விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக நேர்காணல் நடத்தப்பட்டன. சாமியானா போடப்பட்டு அதில் அழைப்பு கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டனர். மேலும், இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் வந்திருந்தனர்.
துப்புரவுப் பணியில் பட்டதாரிகள்
நேர்காணலுக்கு வந்த 70 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தனர். மேலும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளும் குவிந்தனர்.
பி.இ, ஏரோநாட்டிக்கல் பட்டதாரிகள்
மேலும், இந்த நேர்காணலில் பங்கேற்றதில் 500 பேர் பட்டதாரிகள் ஆவர். அதுமட்டுமின்றி பி.இ., பி.டெக்., படித்த வாலிபர்கள், ஏரோ நாட்டிக்கல் படித்த வாலிபர்களும் இதற்கு விண்ணப்பித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது குடும்பத்தினருடன் நேர்காணலில் பங்கேற்ற வாலிபர்கள் சிலர் "தங்களுக்கான பணி கிடைக்கவில்லை. இதனால் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளோம்" என கூறினர்.
மாநகராட்சி கமிஷனர் செய்திக்குறிப்பு
இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான ஷ்வரன்குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாநகராட்சியில் துப்புரவு பணிக்காக விண்ணப்பித்தவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 27-ந்தேதி முதல் நாளை (29-ந்தேதி) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 27 மற்றும் 28-ந்தேதிகளில் நேர்காணலுக்கு வர இயலாதவர்கள் இன்று (29-ந்தேதி) மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ள நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












