மத்திய அரசு அமல்படுத்தியுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழகம் உள்ளிட்டு அனைத்து மாநில அரசுப் பல்கலைக் கழகங்களுக்கான மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதனை செயல்படுத்தியுள்ளது. அதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த புதிய இடஒதுக்கீட்டு நடைமுறையை நடப்பு கல்வியாண்டிலேயே (2019-20) அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்டு அனைத்து மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி-யின் சார்பில் அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்கள், மாநில அரசு செயலர்களுக்கு சுற்றறிக்கையையும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் யுஜிசி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.