புதுடெல்லி: ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதில் பீகார் மாநிலம் முதலிடம் வகிக்கிறதாம். இந்த ஆண்டில் மட்டும் 10-ம் வகுப்புத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 279 பேர் பிடிபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் நடிகர் சஞ்சய் தத், அதிநவீன வகையில் விடைகளை வெளியிலிருந்து ஒருவர் செல்போனில் சொல்ல அதை அதிநவீன கருவி மூலம் கேட்டு தேர்வு எழுதுவது டிரெண்ட் ஆகியுள்ளது.
இதுதொடர்பாக பீகார் மாநில பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்வில் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது, விடைத்தாள்களை மாற்றிக் கொள்வது போன்ற செயல்கள் அடிக்கடி நடக்கும். எங்களது பறக்கும் படையினர் அவர்களைப் பிடிப்பது வழக்கம்.
ஆனால் ஆள்மாறாட்டம் செய்வது தற்போது பீகாரில் அதிகரித்து வருகிறது. இதுவரை 279 பேர் ஆள்மாறாட்டம் செய்ததாக பிடிபட்டுள்ளனர். முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் வருவது போல அதிநவீனக் கருவிகளைக் கொண்டு தேர்வு எழுதுவதும் இப்போது டிரெண்ட் ஆகியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அதிகாரியில் இறங்கியுள்ளனர்.
மேலும் முக்கியமான தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளோம். இதன்மூலம் ஏராளமானோர் பிடிபட்டனர் என்றார் அவர்.
இதுகுறித்து 10-ம் வகுப்புக்கான கல்வி வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங் கூறியதாவது: ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு ஏராளமான பணம் தரப்படுகிறது. இதனால் ஏராளமானவர்கள் இதுபோன்று தேர்வு எழுத வருகின்றனர். அவர்கள் தேர்வு அறைக்குள் நுழையும் முன்னதாகவே அவர்களைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.