சென்னை: உயர் கல்வி நிறுவனமான தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
நாடெங்கிலுமுள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. இதுபோன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயில மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த கல்வி நிறுவனங்களில் சேர மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடும் உண்டு. இந்த கல்வி நிறுவனங்களில் சேரும் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் முடிவை இப்போது மத்திய அரசு எடுத்துள்ளது.
சமீபத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடைபெற்ற ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த செய்தி மாற்றுத் திறனாளிகளின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது.