சென்னை: நாட்டின் உயர்தர கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்(ஐஐஎஸ்சி) போன்றவற்றுக்கு வெளிநாடுகளிருந்து பேராசிரியர்கள் வருகை தரவுள்ளனர்.
கல்வி இணைப்புக்கான உலக அளவிலான ஒப்பந்தத்தின் (ஜிஐஏஎன்) அடிப்படையில் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல பேராசிரியர்கள் இந்தியாவுக்கு வந்து இந்திய மாணவர்களுக்கு கல்வி புகட்டவுள்ளனர்.
இந்தத் திட்டத்துக்காக முதலில் காரக்பூரிலுளள்ள ஐஐடி தேர்வாகியுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி, என்ஐடி ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பேராசிரியர்களைக் கொண்டு வருவதற்கான ஒருங்கிணைப்புப் பணியில் ஐஐடி காரக்பூர் செயல்படும்.
2015-16-ம் கல்வியாண்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வெளிநாட்டு ஆசிரியர்களைக் கொண்டு 500 விதமான படிப்புகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஐஐடி காரக்பூர் இயக்குநர் பேராசிரியர் பி.பி. சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.