டெல்லி: ஐஐடி கல்வி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களை சமஸ்கிருதத்தில் பயிற்றுவிக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் பேசியதாவது:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை எளிதாக மாணவர்கள் பயில சமஸ்கிருதத்தை போதிக்குமாறு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) கல்வி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். இதுதொடர்பான உத்தரவு ஐஐடிகளுக்கு சென்றுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி தலைமையில் ஓரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில் அறிவியல், தொழில்நுட்பத்தை சமஸ்கிருதம் வாயிலாகப் படிக்கும்போது அது மாணவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களை சமஸ்கிருதம் வாயிலாகப் போதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர். மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ஸ்மிருதி இரானி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.