சென்னை: உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது. அதாவது ஐஐடி கல்வி நிறுவனங்கள் தங்களது கல்விக் கட்டணங்களை 150 சதவீதம் உயர்த்த பரிசீலித்து வருகின்றன என்பதுதான் அந்தச் செய்தி.
நாட்டில் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் ஐஐடி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் ஐஐடி கல்வி நிறுவனங்களில் பி.டெக் படிப்புகளுக்கு கட்டணங்களை உயர்த்த ஐஐடி நிர்வாகங்கள் பரிசீலித்து வருகின்றதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஐஐடி கவுன்சிலில் விவாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மனித வள அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துவிட்டால் உடனடியாக இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிடும்.
தற்போது பி.டெக் படிப்புக்கு ஐஐடி-யில் ரூ.90 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிட்டால், அந்தக் கட்டணம் ரூ.2.25 லட்சமாக உயர்ந்துவிடும்.
இதனால் ஏழை மாணவர்கள் ஐஐடி-யில் உயர்கல்வி பயில்வதை நினைத்துப் பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்று மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆய்வகம், கருவிகள், ஊழியர் ஊதியம், சுகாதார விஷயங்கள் குடிநீர், மின் கட்டணம் போன்ற பிரச்னைகளுக்காக கல்விக் கட்டணத்தை உயர்த்தப் போவதாக ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த ஐஐடி முடிவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி நிர்வாகங்களுக்கு மத்திய அரசிடமிருந்து போதிய மானியம் கிடைத்து வரும் நிலையிலும் கட்டணத்தை உயர்த்த பரிசீலித்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று மாணவர்கள் அங்கலாய்க்கின்றனர்.