சென்னை: சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள், அரசு செலவில் ரஷியாவுக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்கு ஏற்படும் செலவு முழுவதையும் அரசே ஏற்கிறது.
மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள வசதியாக ரஷியாவிலுள்ள, தேசிய டோம்ஸ் மாகாண பல்கலைக் கழகம் மற்றும் யூரல் பெடரல் பல்கலைக்கழகத்துடன், சென்னை ஐ.ஐ.டி. சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தனியார் கல்லூரிகளும், சுயநிதி பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டுக்குச் சென்று, கல்வி கற்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளன.
இதன் அடிப்படையில், சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள், பட்டப் படிப்பு காலத்தில், ரஷியாவுக்கு சென்று படிக்கவும், அங்குள்ள மாணவர்களை சென்னை ஐ.ஐ.டி.க்கு அழைத்து வந்து படிக்க வைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டு முயற்சி மாணவர்களுக்கு புதுமையானதாகவும், பயனளிக்கும் வகையிலும் அமையும் என்று சென்னை ஐஐடி-யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். இதற்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்த ஒப்பந்தப்படி, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ரஷ்யாவுக்கு சென்றும், ரஷ்யப் பேராசிரியர்கள் சென்னை ஐ.ஐ.டி.,க்கு வந்தும் பாடம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என, ஐ.ஐ.டி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












