பள்ளி படிப்பை முடித்து, கல்லூரியில் நுழைய காத்திருக்கும் ஒவ்வொரு மாணவரும், சிறந்த கல்லூரி மற்றும் உள்கட்டமைப்பை கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்ற கனவை கொண்டிருப்பர்.
அந்த வரிசையில், பெரும்பாலான மாணவர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து படிக்க வேண்டும் என, ஆசை கொண்டிருப்பர்.
மத்திய, மாநில அரசுக்கு, உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த பல்வேறு தரவுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.
தேசிய அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில், சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது என, அரசால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன.
இருப்பினும், அந்த தரவுகள் சென்னை ஐ.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதில்லை என்ற எண்ணம் அனைவரிடத்திலும் மேலோங்கி இருக்கிறது என்பதை மறைக்க முடியாது.
அவ்வாறு ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களுக்கு தெரிந்த நபர்கள், சமூக ஊடகங்கள், வலைதளங்கள், இன்ன பிற ஆதாரங்கள் வாயிலாகவே, தங்களுக்கான தகவல்களை கேட்டு பெறுகின்றனர். அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களில் சில அடிப்படை ஆதாரமற்றது, போலியானதாகவே இருக்கின்றன.
புதிய முயற்சி
கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை முழுமையாகவும், சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர விரும்புவோருக்கு பலனளிக்கும் வகையிலும், முன்னாள் மாணவர்கள் 'AskIITM.com' என்ற இணையதளத்தை உருவாக்கி, புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளனர்.
48 மணி நேரத்தில் ரிப்ளே
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், வேலைவாய்ப்புகள் தொடங்கி, வளாக வசதிகள் வரை, இக்கல்வி நிறுவனம் தொடர்பான கேள்விகளை 'AskIITM.com'
இணையதளத்தில் பதிவிடுவோருக்கு, 48 மணி நேரத்திற்குள் இமெயில் அல்லது வாட்ஸ்அப் வாயிலாக, முன்னாள் மாணவர்களிடம் இருந்து பதில் கிடைக்கப்பெறும்.
ஐ.ஐ.டி., சென்னை சேர விரும்புவோருக்கு உதவும் நோக்கில், முன்னாள் மாணவர்களின் முன்முயற்சியாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டு
உள்ளது
பார்வையாளர்கள் 'www.askiitm.com' என்ற இணையதளத்தில் ஏற்கனவே இடம்பெற்று இருக்கும் கேள்விகளையோ அல்லது தாங்கள்
விரும்பும் கேள்விகளையோ பதிவிடலாம். இந்த இணையதளம், ஆகஸ்ட் 26ல் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்
இடம்பெற்றுள்ளன.
• ஐஐடி மெட்ராஸ் மின்சார வாகனத் தொழில்நுட்பத்தின் மையம் என்பது உண்மையா?
• தேசியக் கல்வி நிறுவனத் தரவரிசையில் (NIRF) தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்கவைக்கும் வகையில் ஐஐடி
மெட்ராஸ்-ன் செயல்பாடுகள் என்னென்ன?
• ஹாஸ்டல் வசதிகள், ஹாஸ்டல் மெஸ் உணவு தொடர்பானவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கப்பெறும்.
புதிய இணையதளம் குறித்து, ஐ.ஐ.டி., சென்னை இயக்குநர் பேராசிரியர்
வி.காமகோடி கூறியதாவது: விருப்பமுடைய மாணவர்கள் சமூக
வலைதளங்களுக்கு சென்று தகவல்களைத் தேடுகிறார்கள்.
ஆனால் அங்கு கிடைக்கும் தகவல்களோ குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. நம்பகமான தகவலைப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
சிறந்த இக்கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் AskIITM மூலம் ஆர்வமுடன் பதில் அளிப்பது மகிழ்ச்சி தருகிறது. ஐஐடி மெட்ராஸ் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்விக்கும் இது ஒரு தொடக்கப் பயணமாக அமையும் என நம்புகிறேன் என்றார்.
அனைவரும் கேட்கலாம்
இக்கல்வி நிறுவனம் தொடர்பான கேள்விகளை எவரும் கேட்க இணையதளத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவால் அக்கேள்விகளுக்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும். கேள்வி கேட்போருக்கான பதில் இமெயில் மூலமோ, வாட்ஸ்அப் வாயிலாகவோ அல்லது இரண்டிலுமோ வழங்கப்படும்.
பிற மாணவர்கள் பயனடையும் வகையில் இணையதளத்திலும் அக்கேள்விகள் இடம்பெறும்.
இந்த முன்முயற்சி குறித்து பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, தலைவர், ஐஐடி மெட்ராஸ்(முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் தொடர்பு) கூறியதாவது
எங்கள் முன்னாள் மாணவர்கள்தான் இக்கேள்விகளுக்கு பதிலளிக்கச் சிறந்தவர்கள். ஏனெனில் இக்கல்வி நிறுவனத்தில் படித்து, பட்டப் படிப்பு முடித்தபின் வேலைவாய்ப்பையும் நேரடியாகப் பெற்றவர்கள் அவர்கள்
என்றார்
• 'AskIITM' குறித்து, சென்னை, ஐதராபாத், விஜயவாடா ஆகிய நகரங்களில்,செப்டம்பர் 2 தேதி முதல் 4 வரை கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, ஐ.ஐ.டி., மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு.
• ஜே.இ.இ., தேர்வு எழுதுவோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் இயக்குநர் அல்லது முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பலாம். செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில், கல்வி நிறுவன வளாகம் மற்றும் பல்வேறு துறைகளை மெய்நிகர் முறையில் காண முடியும்.
இந்த நிகழ்வுகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
https://www.askiitm.com/events
AskIITM இணையதள குழுவுக்கு தலைமை வகிக்கும் அம்ருதாஷ் மிஸ்ரா கூறுகையில்," தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோர் எளிதில் அணுகும் வகையில் இணையதளம் வடிமைக்கப்பட்டு உள்ளது" என்றார்.
இத்திட்டத்துக்கான படைப்பாற்றல் இயக்குநரான அம்ரித்வத்சா கூறுகையில்," ஐ.ஐ.டி.,யில் நேரடியாக அனுபவம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில், இதில் நுழைய விரும்புவோருக்கு நம்பகமான பதில்களை AskIITM மூலம் அளிக்க முடியும் என நம்புகிறோம்" என்றார்.
இதேபோன்ற முயற்சியை, மாநிலத்தில் இருக்கும் கல்வி நிறுவன முன்னாள் மாணவர்களும் தொடங்கி, எதிர்கால மாணவர்களுக்கு, தாங்கள் சேர விரும்பும் கல்வி நிறுவனங்கள் குறித்த முழு தகவல்கள் கிடைக்கப்பெற்றால், போலி விளம்பரங்கள், தகவல்களை நம்பி கல்லூரிகளில் சேர்ந்து ஏமாறும் மாணவர்கள், பெற்றோருக்கு, ஒரு வரபிரசாதமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.முயற்சி செய்து பாருங்களேன் பிரண்டஸ்...