புதுடெல்லி: தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தில் ஐஐடி கௌஹாத்தியைச் சேர்ந்த மாணவர்கள் இறஹ்கியுள்ளனர்.
நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியிலுள்ள ஐஐடி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மக்களும் வாக்களிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். காம்ரூப் மாவட்டம் ஹாஜோ நகரில் அவர்கள் 200 பேரின் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தவறுகளைத் திருத்தி புதிய வாக்காளர் அடையாள அட்டையைப் பெற உதவியுள்ளனர்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது இவர்கள் இதுபோன்ற பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது 65 ஆயிரம் பேரின் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய ஆன்-லைனில் உதவினர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரசாரத்தில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதுகுறித்து ஐஐடி கௌஹாத்தியைச் சேர்ந்த மாணவர் சரண் கூறியதாவது: அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி நாங்கள் களம் இறங்கியுள்ளோம். யார் யாருக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லையோ அவர்களைத் தேடிப் பிடித்து அவர்கள் புதிய வாக்காளர் அட்டையைப் பெற உதவி வருகிறோம் என்றார் அவர்.