சென்னை: வெளிநாடுகளிலிருந்து வந்த ரூ.1 கோடி சம்பள வாய்ப்பை உதறித் தள்ளிவிட்டு உள்ளூரில் பணிபுரியும் முடிவை எடுத்துள்ளனர் ஐஐடி டெல்லியைச் சேர்ந்த 4 மாணவர்கள்.
வழக்கமாக ஐஐடி-யில் படிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளில் நல்ல சம்பள வாய்ப்பு வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் டெல்லி ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் படித்த 4 மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்பை நிராகரித்துள்ளனர்.
அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் சம்பளம் தர வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருந்தன.
ஆனால் அவற்றை உதறித் தள்ளிவிட்டு உள்ளூரில் அதைவிடக் குறைந்த சம்பளம் கிடைக்கும் பணியில் அவர்கள் சேர்ந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா(இந்தியாவில் உருவாக்குவோம்) திட்டத்தை வலியுறுத்தி அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக பத்திரிகைகளில் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த 4 மாணவர்களின் பெயர் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஐஐடி சென்னை பணியமர்த்துதல் ஆலோசகர் பாபு விஸ்வநாதன் கூறியதாவது: ஐஐடி-களில் படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல ஊதியத்துடன் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவது சகஜம்தான். ஆனால் இந்த மாணவர்கள் அந்த வாய்ப்பை உதறித் தள்ளிவிட்டு இந்தியாவில் பணிபுரிவது பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில் ஐஐடிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மேக் இன் இந்தியா திட்டத்தில் இணையுமாறு நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம் என்றார் அவர்.