சென்னை: கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலலஜி(ஐஐடி) புதிதாக அமையவுள்ளது.
கர்நாடகத்தில் ஐஐஎம், ஐஐஎஸ்சி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது ஐஐடி உயர்கல்வி நிறுவனமும் அமையவுள்ளது. ஹூப்பள்ளி மாவட்டத்திலுள்ள தார்வாட் நகரில் இந்த ஐஐடி அமையும் என்று தெரிகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில் அளித்துள்ளார்.
முதலில் கர்நாடகத்தில் தார்வாட், ரெய்ச்சூர், மைசூரு ஆகிய நகரங்களில் ஏதாவது ஒரு நகரில் ஐஐடி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் பின்னர் இந்த 3 நகரங்களில் தார்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தார்வாட் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் தெரிவித்துள்ளார்.
மைசூரில் ஏற்கெனவே ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளதால் தார்வாட்டுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
ஹூப்பள்ளி-தார்வாட் ஆகிய நகரங்கள் கர்நாடகத்தில் இரட்டை நகரங்களாக அறியப்படுகின்றன. இந்த நகரத்தில் ஐஐடி அமைப்பது சரியாக இருக்கும் என்று 1998-ல் முன்னாள் இஸ்ரோ தலைவர் யு.ஆர். ராவ் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.