சென்னை: சென்னை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்துக்கு முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் ரூ. 8 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளனர்.
சென்னையிலுள்ள மிகப்பெரிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று ஐஐடி. மத்திய மனித வள அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் சென்னை ஐஐடி-யில் ஏராளமான மாணவர்கள் படித்து உலகம் முழுவதும் பல்வேறு உயர் பதவிகளில் சாதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஐடி-யில் படித்த முன்னாள் மாணவர்கள் 300 பேர் ஐஐடி-க்கு ரூ.8 கோடியை வழங்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் 1990-ஆம் ஆண்டு படித்தவர்கள்.
இவர்களில் 300 பேர் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று சந்தித்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர்கள் நல்லுறவுக்கான துறையின் முதல்வர் ஆர்.நாகராஜன் பேசியதாவது: கல்லூரிக்கு தங்கள் நேரம், திறமை, நிதி உள்ளிட்டவற்றை திருப்பிச் செலுத்தும் முன்னாள் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சியாகும்.
இதுபோன்ற நிகழ்ச்சியின்போது ஆசிரியர்கள், உடன்படித்தவர்கள் ஆகியோருடன் மீண்டும் சந்திப்பது ஆரோக்கியமான செயல்களுக்கு அடித்தளமாகிறது. இது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயமாகும் என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது ஐஐடி கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ரூ.8 கோடி நிதியுதவியை குறிப்பிட்ட காலத்துக்குள் அளிப்பதாக முன்னாள் மாணவர்கள் உறுதி அளித்தனர். இதற்காக முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.