சென்னை: கேரளக் கலைஞர்களுக்கு தொழில்முறைப் பயிற்சியை கேரள ஐஐஎம் உயர்கல்வி நிறுவனம் அளிக்கவுள்ளது.
கோழிக்கோடில் அமைந்துள்ளது ஐஐஎம். இந்த ஐஐஎம் சார்பில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறிய கலைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தொழில்முனைவோராக மாற நினைக்கும் கலைஞர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும்.
இதற்காக முதல் கட்டமாக 200 கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 4 நாட்கள் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். சிறப்பாக பயிற்சியை முடிக்கும் கலைஞர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும். மேலும் தினமும் அவர்களுக்கு ரூ.500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இந்தத் தகவலை கேரள மாநில கைவினைப்பொருட்கள் வளர்ச்சி வாரியத்தின் தலைவர் எம்.சி. கமருதீன் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்துக்காக ரூ.2.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில கைவினைப்பொருட்கள் வளர்ச்சி வாரியமும், ஐஐஎம்-மும் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
இந்தக் கலைஞர்கள் தங்களது கைவினைப்பொருட்களை கேரள மாநிலம் முழுவதும் கேரள மாநில கைவினைப்பொருட்கள் வளர்ச்சி வாரிய விற்பனையங்களில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.