மாணவ, மாணவிகள் பயிலும் தொலைதூரக் கல்வி முறை படிப்புகளுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்று இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) அறிவிப்பு செய்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.ignou.ac.in -ல் லாக்கின் செய்து அறிந்துகொள்ளலாம்.
மாணவர்களுக்கான இந்த இணையவழிச் சேர்க்கை தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பு, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

தற்போது இக்னோ பல்கலைக்கழகம் சார்பில் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கையானது இணையவழியில் தொடங்கப்பட்டுள்ளது.
கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல், தொழில்சார் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணைவழியில் ஜுன் 30-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு குறிப்பிட்ட இளங்கலை படிப்புகளில் கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம்.
இக்னோ பல்வேறு ஆன்லைன் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இதில் சேர https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications












