தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே ஐசிஎப் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அந்நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட பெரும்பாலான அலுவலகங்களில் வட இந்தியர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழக கட்சிகள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் தமிழக வேலை தமிழருக்கு என்கிற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐசிஎப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கு தொடர்பான அறிவிப்பில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐசிஎப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது தமிழக இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.