சென்னை: ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்து மகத்தான சாதனையைப் புரிந்துள்ளார் ஐரா சிங்கால். 31 வயதாகும் மாற்றுத்திறனாளியான ஐரா, ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்ற மாற்றுத் திறனாளி என்ற அசத்தலான சாதனைக்குச் சொந்தக்காரராகி உள்ளார்.
31 வயதாகும் ஐரா சிங்கால் இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரி ஆவார்.

ஆனால், இந்தப் பதவியைப் பெற இவர் பல்வேறு சட்டச் சிக்கல்களை ஆரம்ப காலத்தில் எதிர்கொண்டார். மாற்றுத் திறனாளியாக இருந்ததால் பல சிக்கல்களுக்கு ஆளானார். அண்டை வீட்டாரின் கேலி, உடன் படித்தவர்களின் கிண்டல்களால் சிக்கி துவண்டார். இருந்தபோதும் மனம் தளறவில்லை. நீ ஒரு மாற்றுத் திறனாளி. உன்னால் தனியாக நிற்கக்கூட முடியாது. துப்புரவுத் தொழிலாளியாக இருக்கக் கூட லாயக்கில்லை என்ற சொற்களைக் கேட்டவர். ஆனாலும் அசராத மன தைரியத்தால் இன்று ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்று முத்திரை பதித்தவர் ஐரா.
டெல்லியைச் சேர்ந்த ராஜேந்திர சிங்கால், அனிதா சிங்கால் தம்பதியின் ஒரே மகள் ஐரா சிங்கால். லாரென்டோ கான்வென்ட் பள்ளியில் 10-ஆம் வகுப்பு முடித்த ஐரா, தௌலா கானில் உள்ள ராணுவப் பள்ளியில் 12-ஆம் வகுப்பை முடித்தார். இதையடுத்து, நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பி.இ (கணினிப் பொறியியல்) பட்டப் படிப்பு முடித்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ (விற்பனை, நிதி) முதுகலைப் படிப்பிலும் தேர்ச்சி கண்டார்.
அப்போது இவருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது. இதையடுத்து, 2008 முதல் 2010 வரை காட்பரி இந்தியா நிறுவனத்தில் வாடிக்கையாளர் மேம்பாடு அதிகாரியாக பணியாற்றினார்.
முதுகுத்தண்டு வளர்ச்சி குறைபாடால் பிறவியிலேயே பாதிக்கப்பட்ட இவருக்கு அரசுப் பணியில் சேர வேண்டிய ஆர்வம் சிறு வயதிலிருந்தே உள்ளது. அதனால் பட்டப்படிப்பு முடித்தது, மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையமான(யுபிஎஸ்சி) தேர்வுக்கு ஆயத்தமாகி வந்தார்.
2010-இல் நடந்த தேர்வில் இவர் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் பணியை இவருக்கு வழங்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, மருத்துவத் தகுதிப் பரிசோதனைக்கு இவர் உள்படுத்தப்பட்டார். அப்போது இவருக்கு பல்வேறு சோதனைகள் வந்தன.
மாற்றுத்திறனாளியாக ஐரா சிங்கால் இருந்தது, ஐஆர்எஸ் பணி அதிகாரி வெறும் 4.5 அடி மட்டுமே உயரம் இருப்பதால் அவரால் அப்பணியை செய்ய முடியாது என்று கூறி அவருக்குப் பணி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதனால் கடும் கோபமடைந்த ஐரா, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதையடுத்து, 2013-இல் ஐஆர்எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர் மத்திய சுங்கத் துறையில் உதவி ஆணையராகத் தற்போது டெல்லியில் பணியாற்றி வருகிறார்.
அரசுப் பணிக்கு வரும் முன்னதாகவே தனது உரிமையை நிலைநாட்டி வழக்குத் தொடர்ந்தவர் ஐரா. கால்பந்துப் போட்டியில் அதிக ஆர்வமுடையவர். சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றே தாரக மந்திரம் கொண்டவர். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்ற சொல்லை அடிக்கடி சொல்லிக் கொள்வாராம்.
ஆங்கிலம், ஹிந்தி மொழி மட்டுமன்றி ஸ்பெயின் நாட்டின் ஸ்பானிஷ் மொழியையும் சரளமாகப் பேசும் திறனைப் பெற்றுள்ளார் ஐரா சிங்கால்.


Click it and Unblock the Notifications












