தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாயின. இந்த முறை கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 6,996 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவச் செல்வங்கள் http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ஆசிரியர்களும், பெற்றோரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்தன. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ம்தேதி முதல் 13-ம்தேதி வரை நடந்தது. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் விடைத்தாள் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும், மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்புப் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை, தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதமாக அதகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாட வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தமிழ் 35 மாணவர்களும், ஆங்கிலத்தில் 7 மாணவர்களும், இயற்பியலில் 633 மாணவர்களும், வேதியியலில் 471 மாணவர்களும், உயிரியலில் 652 மாணவர்களும், கணிதத்தில் 2,587 மாணவர்களும், தாவரவியலில் 90 மாணவர்களும், விலங்கியலில் 382 மாணவர்களும், கணினி அறிவியலில் 6,996 மாணவர்களும், வணிகவியலில் 6,142 மாணவர்களும், கணக்கு பதிவியலில் 1,647 மாணவர்களும், பொருளியலில் 3,299 மாணவர்களும், கணினி பயன்பாடுகளில் 2,251 மாணவர்களும், வணிக கணிதத்தில் 210 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதிகபட்சமாக கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடத்தில் 6,996 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு பெற்று சாதித்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸில் செஞ்சுரி மாணவ, மாணவிகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்ச்சி முடிவுகளை மாணவச் செல்வங்கள், www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக காணலாம்.


Click it and Unblock the Notifications












