புது டெல்லி : தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2017ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று (ஏப்ரல் 3) திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்.
இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இப்பட்டியலை தயாரிப்பதற்காக தேசிய தர வரிசை நிர்ணய கமிட்டி என்ற அமைப்பினை மத்திய அரசின் அங்கமான மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் 29.09.2015 அன்று முதலில் வெளியிட்டடுள்ளது.
தேசிய தர வரிசை நிறுவனம் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பொறியியல், மேலாண்மை, மருந்தியல் மற்றும் பல்கலைக் கழகங்கள் நான்கு வகைகளாகப் பிரித்து தனித்தனியே தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட முடிவு செய்து 2016ம் ஆண்டு (கடந்த வருடம்) முதன்முதலில் தேசிய தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை தயார்செய்வதற்கு முன் ஆய்வு செய்யப்படும் விபரங்கள்
1. கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் அதற்குத் தேவையான வளங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் கூட்டுச் செயல் திறன்.
2. கல்வி நிறுவனங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களின் திறமை (வேலை வாய்ப்பு, மேற்படிப்பு மற்றும் தொழில் முனையும் தன்மை, வேலை வாய்ப்பு மூலம் பெறும் சம்பளம்) மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் சதவீதம், கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண்கள் மற்றும் பணிபுரியும் பெண்களின் சதவீதம், கல்வி நிறுவனங்களில் பயிலும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களின் சதவீதம், கல்வி நிறுவனங்களில் பயிலும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்.
3. சமானியர்களை மதிப்பீடு செய்யும் செயல்முறை, இருக்கை விகித பயன்பாடுகள் போன்ற விவரங்கள் ஆகிய அனைத்து விபரங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு தேசிய தர வரிசைப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. மேலும் இந்த வருடம் இதில் 800க்கும் மேற்பட்ட புதிய பங்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தேசிய கல்வி நிறுவன தரவரிசை 2017ம் ஆண்டு பட்டியலை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடத்தைப் போல இந்த வருடமும் (2017) ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐஐடி பாம்பே, மற்றும் ஐஐடி காரக்பூர் இடம்பெற்றுள்ளன.
மேலாண்மை பட்டபடிப்புகான கல்வி நிலையத்தில் இந்த வருடமும் (2017) ஐஐஎம் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ், பெங்களூரு, பல்கலைக் கழகங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய ஜே.என்.யூ. மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகங்கள் முறையே 3 மற்றும் 4-ம் இடத்தை கடந்த வருடம் பெற்றிருந்தன. ஆனால் ரோஹித்த வெமுலா அதனைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன் ஆகியோர் மரணத்தால் இந்த வருடம் ஜே.என்.யூ. மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகங்கள் தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.