சென்னை: உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்குமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உதவ முன்வந்துள்ளது.
இதற்காக 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த வகுப்பு மாணவர்கள் தங்களது உயர்கல்வியைத் தேர்வு செய்ய முடியும் என்று மத்திய மனித வள அமைச்சகம் நம்புகிறது.
இதற்காக தேசிய ஆய்வு சேவை(என்டிஎஸ்) என்ற அமைப்பை மத்திய அமைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அமைப்பு மூலம் கல்வி அறிவு தகுதிச் சோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாணவர்களின் கல்வித் தகுதி சோதிக்கப்பட்டு அவர்களுக்கான உயர்கல்வி எது என வழிகாட்டப்படும்.
3 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களுக்கு நடத்தைச் சான்றிதழுக்குப் பதிலாக தகுதி சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்தே இந்த கல்வித் தகுதி சோதனை நடத்தப்படுகிறது எனத் தெரிகிறது.
தொடக்கத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தச் சோதனை நடத்தப்படும். அதன் பிறகு இது 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இது அமெரிக்காவில் நடத்தப்படும் ஜிஆர்இ, டோபல் போன்ற தேர்வுகளைப் போன்று நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.