சென்னை: பல்கலைக் கழக மானியக் குழு தான் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் தோல்வி அடைந்துவிட்டது. எனவே அதை கலைக்கலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்த ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நாட்டில் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகங்கள் அவற்றின் கீழ் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளை ஒருங்கிணைப்பது, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது, அவற்றுக்கு தர நிர்ணயம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக 1956ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுதான் பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி). பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, அரசு பல்கலைக கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு மானியம் அளிப்பது யுஜிசியின் முக்கியப் பணியாக உள்ளது.
தற்போது, அமைந்துள்ள புதிய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் யுஜிசியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு குழு அமைத்தது. இதன் தலைவராக முன்னாள் யுஜிசியின் தலைவர் ஹரிகவுதம் நியமிக்கப்பட்டார்.
இந்த குழு யுஜிசி குறித்து ஆய்வு செய்து சமீபத்தில் தனது பரிந்துரையை மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அளித்தது. அதில், யுஜிசி தான் செய்ய வேண்டிய பணிகள் என்னவோ அவற்றை செய்யத் தவறி விட்டது. அதை மறு சீரமைப்பது அல்லது வேறு மாதிரியாக மாற்றி அமைப்பது என்பது வீண் வேலை. எனவே யுஜிசியை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக தேசிய உயர்நிலை கல்வி ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக பார்லிமெண்டில் சட்டம் இயற்ற வேண்டும். இந்த புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் வரை மத்திய மனித வள அமைச்சகம், நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து யுஜிசியில் மாற்றங்களை செய்யலாம். யுஜிசியின் தலைவர் நாடு முழுவதும் சென்று பல்கலை செயல்பாடுகளை ஆய்வு செய்வதை செய்வதே இல்லை.
இந்த பரிந்துரை குறித்து மனித வள மேம்பாட்டுத்துறை தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளது. இதையடுத்து விரைவில் யுஜிசி கலைக்கப்படும் என்று தெரிகிறது.