டெல்லி: ஐஏஎஸ் அதிகாரியாவது எப்படி என்று குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவி டினா டாபி விளக்கியுள்ளார். 2015-ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் டெல்லியைச் சேர்ந்த பெண் டினா டாபி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
ரயில்வே அதிகாரி
ரயில்வே அதிகாரியான அத்தர் ஆமீர் உல் ஷபி கான் 2-வது இடத்தையும், டெல்லியைச் சேர்ந்த ஜஸ்மீத் சிங் சாந்து 3-வது இடத்தையும் பிடித்தனர்.
டினா டாபி
22 வயதான டினா டாபி டெல்லியிலுள்ள லேடி சீராம் கல்லூரியில் படித்தவர். ஐஏஎஸ் அதிகாரியாக உருவாவது எப்படி என்று அவர் கூறியதாவது: இது எனக்கு மிகவும் அருமையான தருணம். ஐஏஎஸ் அதிகாரியாவதுதான் எனது லட்சியமாக இருந்தது.
மறக்க முடியாது
அதை இன்று நிறைவேற்றியுள்ளேன். இதை என்னால் மறக்கவே முடியாது. நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது.
கனவு நிறைவேறியது
இந்தக் கனவு நிறைவேறாது என்று நினைத்திருந்தேன். ஆனால் அது இப்போது நிஜமாகிப் போனது.
சிபிஎஸ்இ படிப்பில் டாப்
நான் சிபிஎஸ்இ பிரிவில் பிளஸ் 2 படிக்கும்போது முதலிடம் பிடித்தேன். ஆனால் ஐஏஎஸ் தேர்வுகளில் முதலிடம் பிடிப்பது என்பது மகிழ்ச்சியான ஒன்று. முயன்று படித்தால் அனைவருமே இந்தத் தேர்வில் வெற்றி பெறலாம். கடின உழைப்புதான் முக்கியம்.
நீங்களும் ஆகலாம்
அதைச் செய்யும்போது உங்கள் கனவுகள் நிறைவேறும். ஐஏஎஸ் ஆகலாம். தேர்வு முடிவுகள் வந்ததும் என்னால் பேசவே முடியவில்லை. வாயடைத்துப் போய்விட்டேன்.
சமுதாய சேவை
சமுதாயத்துக்காக தொடர்ந்து சேவை செய்வேன் என்றார் அவர்.
புதுச்சேரி மாணவர்
இந்தத் தேர்வில் புதுச்சேரியைச் சேர்ந்த வைத்திநாதன் என்பவர் 37-ஆவது ரேங்க் பெற்றுள்ளார்.
499 பேர் பொதுப் பிரிவு
தேர்வு செய்யப்பட்டவர்களில் 499 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 314 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவையும், 176 பேர் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) பிரிவையும், 89 பேர் பழங்குடியின (எஸ்.டி.) பிரிவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
காத்திருப்புப் பட்டியல்
இவர்களைத் தவிர 172 பேர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மொத்த காலிப் பணியிடங்கள் 1,164 ஆகும். இதில் ஐஏஎஸ் பணியில் 180 பேரும், ஐஎஃப்எஸ் பணியில் 45 பேரும், ஐபிஎஸ் பணியில் 150 பேரும், குரூப்-ஏ பணியில் 728 பேரும், குரூப் பி பணியில் 61 பேரும் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.