சென்னை : தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேர்வாகும். இதற்கான பயிற்சி வகுப்புக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் அதாவது கோச்சிங் சென்டர்கள் புற்றீசல் போல கிளம்பி விட்டன. கோச்சிங் சென்டர்களில் ரூ. 25,000 முதல் ரூ. 1,00,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணங்கள் வசூலிக்கும் காசுக்கு ஏற்றாற்போல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில்லை என்பது பெரும்பாலோரின் குற்றச் சாட்டாக உள்ளது.
படையெடுக்கும் பயிற்சி வகுப்புகள்
நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு கல்லூரிகளிலுள்ள தேசிய இடஒதுக்கீட்டிற்கான 15% இடம் நிரப்பப்படுகிறது. மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இட ஒதுக்கீடுத் தவிர மற்ற காலி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வுக்குத்தான் தற்போது பயிற்சி வகுப்புகள் படையெடுக்க ஆரம்பித்து விட்டன.
பயிற்சி வகுப்புகளின் மெத்தனம்
நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளில் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை வைத்து முறையாக பாடம் நடத்தப்படுவது இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ள மாதிரிவினாத்தாள்களை வைத்துக் கொண்டு கண்மூடித்தனமாக கிளாஸ் நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பல பயிற்சி வகுப்புக்கள் மீது வைக்கப்படுகின்றன. முந்தைய வருடங்களில் மற்ற மாநிலங்களில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள்களை வைத்துக் கொண்டு பல பயிற்சி வகுப்புக்கள் ஒப்பேத்தி வருகிறது.
மாணவர்களை ஏமாற்றுகிறார்கள்
நீட் தேர்வு என்பது என்பது மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு. இதற்கு மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள என்சிஇஆர்டி பாடத்திட்டங்களில் இருந்துதான் கேள்விகள் பெரும்பாலும் கேட்கப்படும். என்சிஇஆர்டி பாடத்திட்டங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் வெறும் பழைய மாதிரி வினாத்தாள்களையும், மாநில அரசு புத்தகத்தையும் வைத்துக் கொண்டு பல பயிற்சி வகுப்புக்களில் பணத்தை பிடிங்கிக் கொண்டு மாணவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
உழைப்பை நம்புங்கள்
மாணவர்களே நீங்கள் பயிற்சி வகுப்புகளுக்கு போய் கஷ்டப்பட்டு படித்து எப்படியாவது டாக்டராகி விட வேண்டும் என்று நினைப்பது நல்லதுதான். நல்ல பயிற்சி வகுப்புகளை தேர்ந்தெடுத்து படியுங்கள். உங்கள் பணம் மற்றும் நேரத்தை வீணடிக்கும் பயிற்சி வகுப்புக்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் டாக்டர் லட்சியம் நிறைவேற கடினமாக உழைத்து முன்னேறுங்கள். உங்கள் உழைப்பை நம்பாமல் வெறும் பயிற்சி வகுப்புக்களை மட்டும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
பெற்றோர்களின் மன வருத்தம்
பயிற்சி வகுப்புக்கள் பெரும்பாலும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன. மாணவ மாணவியர்களை ஏமாற்றி அவர்களின் பெற்றோரிடமிருந்து பெருந்தொகையை பயிற்சிக்கட்டணமாக பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகளை அளிப்பதில்லை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் மனவருத்தமாக உள்ளது.
தரமான பயிற்சி வகுப்புகள்
பயிற்சி வகுப்புக்கள் நடத்துபவர்கள் நியாயமான பயிற்சிக் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு மாணவ மாணவியர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு பயிற்சிகளை நடத்த வேண்டும். பயிற்சி வகுப்புகள் என்பது மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்காகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் செயல்படும் போதுதான் மாணவ மாணவியர்கள் பயன் பெற முடியும்.