சென்னை: உயர்நீதிமன்றங்களில் நாடு முழுவதும் 392 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
நாட்டில் நீதித்துறையில் நீதிபதிகள் பணியிடங்கள் பல்வேறு இடங்களில் காலியாகவுள்ளன. கீழமை நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், செஷன்ஸ் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், நடுவர்மன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் என பல நீதிமன்றங்களில் பல பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தற்போது உயர் நீதிமன்றங்களில் மட்டும் 392 இடங்கள் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் 8 பேர் விரைவில் ஓய்வு பெற இருக்கின்றனர். அந்த இடங்களையும் சேர்த்தே தற்போது 392 காலியாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:
நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 1,017 நீதிபதிகள் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உயர் நீதிமன்றங்களில் தற்போது 625 நீதிபதிகளே பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்களின் காலி எண்ணிக்கை 384 ஆகும். இந்த எண்ணிக்கை, கடந்த மே மாதம் 366 ஆக இருந்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இருவரும், அலாகாபாத், கொல்கத்தா, குஜராத், கர்நாடகம், கேரளம், பாட்னா ஆகிய உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தலா ஒருவரும் இம்மாத இறுதிக்குள் ஓய்வு பெற இருக்கின்றனர். இதையடுத்து, உயர் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 384இல் இருந்து 392ஆக அதிகரிக்கவுள்ளது என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.