சென்னை: பி.எட், எம்.எட். படிப்புகள் படிப்புக் காலம் இரண்டாண்டுகளாக மாற்றப்படுகிறது என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுநாள் வரை பி.எட், எம்.எட். படிப்புக் காலம் ஓராண்டாக இருந்து வந்தது. இந்த நிலையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பி.எட். படிப்புகளுக்கான சேர கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி தொடங்கி 6 நாட்கள் வரை கவுன்சிலிங் நடைபெறும்.
முன்னதாக இரண்டாண்டாக மாற்றும் என்சிடிஇ-யின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பி.எட் படிப்பை இரண்டாண்டாக மாற்றுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.
ஆனாலும் தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு பி.எட் படிப்புக்கான காலத்தை இரண்டாண்டு என மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நடப்பாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பத்துக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை நடத்தவுள்ளது.
பி.எட். படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாள் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.
செப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.
அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.


Click it and Unblock the Notifications












