சென்னை : டெட் தேர்வில் வினாத்தாள் வெளியாகாமல் மாணவர்கள் காப்பி அடிக்காமல் கண்காணிக்க வேண்டும் என இயக்குனர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 29ம் தேதியும், 30ம் தேதியும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ளது. 29ம் தேதி இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வும் 30ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வும் நடக்கவிருக்கிறது.
ஏப்ரல் 29ம் தேதி நடக்கும் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வை 2 லட்சத்து 37 ஆயிரம் பேரும், 30ம் தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை 5 லட்சம் பேரும் எழுத உள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இதற்காக தமிழகம் முழுவதும் 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர்.
முக்கிய உத்தரவுகள்
இதுக்குறித்து பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் (டி.ஆர்.பி) ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா நேற்று கூட்டம் நடத்
தினார். அதில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
குளறுபடி இருக்கக் கூடாது
டெட் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லாமல் தேர்வை நடதத வேண்டும், யாரும் காப்பி அடிக்காமல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். வினாத்தாள் லீக் ஆகாமல் தேர்வு துவங்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்வு அறைகளில் போதிய அளவுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்
தேர்வு மையங்களில் கடிகாரம், குடிநீர், மின்வசதி, மின்விசிறி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தாமதமாக வரும் தேர்வர்களை அறைக்குள் அனுமதிக்கக் கூடாது. பறக்கும் படை அமைத்து தேர்வு நாளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு போல் இந்த தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.