உடற்கல்வி சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி சிறப்பாசிரியர்களாக தகுதியானவர்களாக பணி வழங்க பரிசீலிக்க வேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து 2017-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, 2017 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 632 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இந்த தேர்வில் பலருக்கு கல்வித்தகுதி இல்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மலர்விழி உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்டோர் எதிர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு தற்போது ஓர் உத்தரவினை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்களையும் தகுதியானவர்களாகக் கருதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து இவர்களுக்கும் பணி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.