சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பதவிக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நெடுஞ்சாலைத் துறையின் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் (கட்டடம்) பிரிவில் காலியாகவுள்ள 213 இடங்களுக்கு செப்டம்பர் 6-ஆம் தேதியன்று எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கு 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
விண்ணப்பதாரர்களின் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) பதிவு செய்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப் பட்டியலில் (Rejection list) தெரிந்து கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 18004251002 என்ற கட்டணமில்லாத தொலைபேசியிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.