சென்னை: குரூப்-2 தேர்வை 2016 ஜனவரி 24-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.
எழுதுபொருள், அச்சகத் துறை, நில அளவை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் 1,863 நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வு டிசம்பர் 27-ல் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. கடந்த 12-ம் தேதி அறிவிப்பு செய்தது.
இந்த நிலையில், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான "நெட்' தேர்வும் டிசம்பர் 27-ஆம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
ஒரே நாளில் இரு தேர்வுகள் நடைபெறுவது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, தேர்வு தேதியை மாற்றி டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரூப்-2 தேர்வு அறிவிப்பு கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதில், 84 கூடுதல் பதவிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான தேதி மாற்றப்பட்டு, 2016 ஜனவரி 24-ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெறும்.
இதுதொடர்பான சந்தேகங்களுக்கு [email protected] என்ற மின்அஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ மாணவ, மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.