சென்னை: தோல்வியைக் கண்டு அச்சப்படாதீர்கள். அதை சமாளித்து வெற்றி காணுங்கள் என்று காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுயூசன்ஸ் நிறுவனத்தின் மேலாண் உதவித் தலைவர் ஆர். சந்திரசேகரன் பேசினார்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற 11வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, மேலும் அவர் பேசியது:

திருச்சியில் என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பல சாதனையாளர்களை உருவாக்கித் தந்துள்ளது.
இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் படிப்பதையே பெருமையாகக் கருதவேண்டும்.
என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டங்களை பெறுபவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இன்றைய நிலையில் இளைய சமுதாயம் மற்றவர்கள் கூறும் அறிவுரையை ஏற்க மறுக்கிறது. இதற்கு நீங்கள் காரணமல்ல, உங்கள் வயதுதான்.
தொழில்புரட்சியின் காரணமாக வேலைவாவாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது.இளைஞர்கள் கனவு காண வேண்டும். அந்த கனவு பெரிய அளவில் இருக்க வேண்டும். தோல்வியைக் கண்டு அச்சப்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

சவால்களையும், பின்னடைவுகளையும் சந்திக்க இளைஞர்கள் தயங்குகிறார்கள். அதை சமாளித்து வெளியே வந்தால்தான் எல்லாவற்றிலும் ஜெயிக்க முடியும். தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
இன்றைய இளைஞர்கள ஒவ்வொருவரும் திறமை வாய்ந்தவர்கள்தான். அதை சரியான முறையில் வெளிப்படுத்தினால்தான் சாதிக்க முடியும்,. குழுவாக இருந்து செயல்பட்டால்தான் உங்களால் வெற்றி பெற முடியும். நீங்கள் குழுவாக செயல்படும் போது பல்வேறுவிதமான கருத்துகள் வரும், அதிலிருந்து பலவற்றை அறிந்து அதற்கேற்றவகையில் செயல்பட முடியும். மேலும், மற்றவர்கள் கூறும் கருத்துகளைக் கேளுங்கள்.
கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் பலருக்கு என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நிலையில், உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, சமுதாயத்துடன் இணைந்து செயல்படுங்கள்.
உங்கள் செயலுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். உங்களின் பலம், பலவீனம் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுங்கள் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் என்.ஐ.டி. நிர்வாகக் குழுத் தலைவர் குமுத் சீனிவாச் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில், 1642 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை சிடிஎஸ் மேலாண் உதவித் தலைவர் சந்திரசேகரன், என்ஐடி இயக்குநர் எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர் வழங்கினர்.
விழாவில் என்ஐடி பதிவாளர் ஏ. பழனிவேல், புல முதன்மையர் ஏ. அருள்டேனியல், பேராசிரியர் சிவகுமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications












