சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 540 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான ஆன்-லைன் கவுன்சிலிங் இன்று நடைபெறவுள்ளது.
புரமோஷன் கனவுகளுடன் அவர்கள் தங்களது கவுன்சிலிங்கை எதிர்கொள்ளவுள்ளனர்.
தமிழகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கவுன்சிலிங் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், தமிழ், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே இந்தக் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் பல இடங்களில் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், இந்த ஆண்டு இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக பணி நிரவல் கவுன்சிலிங் மட்டுமே நடைபெற்றது. தற்போது, பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
ஏராளமான கனவுகளுடன் கவுன்சிலிங்கை எதிர்கொள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு வந்துள்ளனர்.