சென்னை: அரசுப் பள்ளிகளின் காலியாகவுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிகிறது.
அரசு பள்ளிகளில் சுமார் 600 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2013-14, 2014-15-ஆம் கல்வியாண்டுகளில் காலியான 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2014-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்பட்டு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், நியமனம் தொடர்பாக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு 500 முதல் 600 காலியிடங்கள் உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது. அதன்பிறகே, இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
பின்னர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
பெரும்பாலும், கடந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெற்ற அதேகாலத்திலேயே இந்த ஆண்டும் போட்டித் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.