சென்னை: கடல்சார் வணிகத்தை அதிகப்படுத்த 3 புதிய துறைமுகங்கள் தொடங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
கடல்சார் பல்கலை.
சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 2-ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.
2449 பேருக்கு பட்டம்
பட்டமளிப்பு விழாவில், 366 பேருக்கு நேரடியாக பட்டச் சான்றிதழ்களும், 2,449 பேருக்கு பட்டங்களும் வழங்கப்பட்டன. பட்டங்களை வழங்கி நிதின் கட்கரி பேசியதாவது:
ரூ.300 கோடி
பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 300 கோடியையும், செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.40 கோடியும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இது தலைசிறந்த பல்கலைக்கழகமாக உருவாகும்.
வேலைவாய்ப்பு
பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்காகவும், கடல்சார் துறைகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.
சாகர் மேளா
இதற்காக "சாகர் மேளா' எனும் மிகப் பெரியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
துறைமுகம் நவீனம்
இதன்படி, துறைமுகங்களின் மேம்பாடு, நவீனமயமாக்குதல், அதைச் சார்ந்த தொழிற்சாலைகள் மேம்பாடு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.
குளச்சல் துறைமுகம்
தமிழகத்தில் குளச்சல், மேற்கு வங்கத்தில் சாகர், மகாராஷ்டிர மாநிலத்தில் தஹானு ஆகிய பகுதிகளில் மூன்று புதிய துறைமுகங்கள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன.
2500 மில்லியன் டன் சரக்கு
இந்தப் புதிய துறைமுகங்களில் 2055-ஆம் ஆண்டுக்குள் 2500 மில்லியன் டன் சரக்கு கையாளுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீர்வழிப் போக்குவரத்து
உள் நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
5 ஆறுகள்
முதல்கட்டமாக கங்கை, பிரம்மபுத்திரா, சென்னை பக்கிங்ஹாம் கால்வாய், கேரள நீர்வழி, ஒடிசாவின் மகாநதி ஆகிய 5 ஆறுகளில் நீர்வழிப் போக்குவரத்து மேம்படுத்தப்பட உள்ளன. இதில் கங்கையில் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன என்றார் அவர்.