சென்னை: மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் கடந்த நிதியாண்டில் 9,303 சிறுபான்மையினர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பதிலில் கூறியுள்ளதாவது:
2014-15-ஆம் நிதியாண்டில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் 9,303 பேர் மத்திய அரசுப்பணிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணியமர்த்தப்பட்டனர்.
மத்திய அரசுப் பணிக்கு கடந்த நிதியாண்டில் பணியமர்த்தப்பட்டவர்களில் 8.5 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவர்.
மேலும், பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தற்போது கைவசம் இல்லை.
சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதை அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்றார் அவர்.