சென்னை: பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்க வேண்டிய இலவச பஸ் பாஸ் குறித்த விவரங்களை இப்போதே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான பணிகள் தொடங்கின.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியருக்கு பல்வேறு நடத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. அவற்றில் இலவச பஸ் பயண அட்டையும் ஒன்று. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் தொடங்கியதும் மாணவர்களின் கணக்கெடுப்பு நடத்தி அதற்கு பிறகு பட்டியல் தயார் செய்து பணய அட்டைகள் வழங்கப்படும். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் தான் மாணவர்கள் பயண அட்டைகள் பெறுவார்கள்.
இதை தவிர்க்க இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே பயண அட்டைகளை வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து தற்போது பள்ளிகளில் தொடர்ந்து படித்து வரும் மாணவ மாணவியரின் விவரங்கள் அனைத்தும் ஏற்கெனவே பயண அட்டைகள் பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களும் ஆன்லைன் மூலம் பதிவேற்றும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பயிற்சி ஏற்கெனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல்கள் தயார் செய்யப்பட்டதும் அதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து பள்ளி மேலாண்மை தகவல் மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு அனைத்து மாணவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு அரசு போக்குவரத்து துறைக்கு அனுப்பி இலவச பயணி அட்டைகள் பெறப்படும்.
இதன் மூலம், மாணவர்கள் போக்குவரத்து பணிமனைகளுக்கு சென்று விண்ணப்பங்கள் பெற்று அதை பூர்த்தி செய்து கொடுத்து பயண அட்டை பெறும் சிரமங்கள் தவிர்க்கப்படும்.