சென்னை: பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதன்படி பிளஸ் 2 தேர்வு மே 7ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியாகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிந்தன. இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதினர்.
பிளஸ் 2 தேர்வின் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்த உடனே விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கின. ஏப்ரல் 18ம் தேதியுடன் அந்த பணி முடிந்தது. ஏப்ரல் 20ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் , பிளஸ் 2 தேர்வு முடிவுள் மே 7ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியாகும் என்று தேர்வுத்துறை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் மேற்கண்ட தேதிகளில் காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் அரசுத் தேர்வுகள் துறையின் அலுவலகத்தில் வெளியிடப்படும். மேற்கண்ட தேர்வுகள் எழுதியுள்ள மாணவ மாணவியர் தேர்வுத்துறையின் இணைய தளம் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தேர்வுத்துறை இணைய தளத்தில் சென்று பதிவெண், பிறந்த தேதி மாதம் வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












