சென்னை: ஆந்திர மாநிலத்தில் உயர்கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.,3,030 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
இத்தகவலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தற்போது ஆந்திரம், தெலங்கானா என இரு மாநிலங்களாக உருவாகியுள்ளன. இதையடுத்து மாநிலங்களில் பல துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன் ஓர் அங்கமாக ரூ.,3,030 கோடி மதிப்பிலான உயர்கல்வி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகுடம் பகுதியில் தேசிய தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்(என்ஐடி) அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது: என்ஐடி வளர்ச்சிக்காக ரூ.300 கோடி முதலீடு செய்யப்படும். தற்போது என்ஐடி வாசவி பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து செயல்படும். தொடக்கத்தில் 480 மாணவ, மாணவிகள் என்ஐடி-யில் சேர்க்கப்படுவார்கள்.
ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும்.
திருப்பதியில் ஐஐடி அமைக்க ரூ.700 கோடி ஒதுக்கப்படும். அதைப் போலவே திருப்பதி அருகே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் அமைக்க ரூ.870 கோடி ஒதுக்கப்படும்.இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் ரூ.680 கோடி செலவில் ஐஐஎம் அமைக்கப்படும்.
ஆந்திர மாநிலத்தில் உயர்கல்வி வளர்ச்சிக்காக மொத்தம் ரூ,3,030 கோடி முதலீடு செய்யப்படும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் எம். வெங்கையா நாயுடு, ஒய்.எஸ். சௌத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.