இந்தியாவின் எல்லைகளில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு 170 சதவிகிதம் வரையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா- சீனா எல்லைப் பிரச்சனைகளுக்குப் பிறகு எல்லை பகுதியில் பணிபுரியும் மக்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 100 முதல் 170 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, லடாக் பகுதியில் சாலை கட்டுமான பணியில் ஈடுப்பட்டு வரும் பணியாளர்களுக்கு அதிக அதிகரிப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHIDCL) வெளியிட்டுள்ள அந்த உத்தரவில், சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உடனான எல்லைப் பகுதிகளில் பணிபுரிபவர்களின் ஊதியம் 100 முதல் 170 சதவிகிதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, லடாக் பகுதியில் பணியாற்றும் கணக்காளரின் சராசரி ஊதியம் ரூ.25,700 எனில் அது தற்போது ரூ.47,360-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சிவில் பொறியாளரின் ஊதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.60,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் ஊதியம் ரூ.55,000-லிருந்து ரூ.1,23,600-வரையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.