கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அதன் ஊழியர்கள் டிசம்பர் 31 வரையில் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டு தொழில் நிறுவனங்களில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, ஊரடங்கின் காரணமாக ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வகையில் உத்தரவிடப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வரும் நிலையில், மீண்டும் எப்போது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற முறையான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான காலகட்டம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.