தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தபால் துறையின் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் இந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
தபால் துறைத் தேர்வு
நாடு முழுவதும் உள்ள தபால் துறை காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான தேர்வு கடந்த ஜூன் 5ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 14ம் தேதியன்று இத்தேர்வு நடைபெற்றது
புறக்கணிக்கப்பட்ட தமிழ்
முன்னதாக, தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஜூலை 12ம் தேதி மத்திய அரசு சார்பில் மாநில தபால் துறை அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், தற்போது நடைபெறவுள்ள தபால் துறை தேர்வுகளில் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மதுரைக் கிளையில் வழக்கு
தேர்வு நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. இதனிடையே, தேர்வுக்கு தடை விதிக்க முடியாது. தேர்வு நடைபெறட்டும். ஆனால், தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆங்கிலம் மற்றும் இந்தி
இதனைத் தொடர்ந்து, தபால் துறைத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் இது தொடர்பாக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர்.
தமிழக எம்.பி-க்கள்
தமிழகத்தில் தொடர்ந்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த தமிழக எம்.பி.க்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இது தொடர்பாகக் குரல் கொடுத்தனர். மாநிலங்களவையில் திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் நவநீதி கிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மேலும், இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 16ம் தேதியன்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது குறித்து பேசினார். அப்போது, கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும். ரத்து செய்யப்படும் தேர்வானது விரைவில் மீண்டும் நடத்தப்படும். தமிழ் மட்டுமல்லாது இதர அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
மீண்டும் தேர்வு, தமிழில் தேர்வு
சமீபத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும். தமிழிலும் தேர்வுகள் எழுதலாம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதால் விண்ணப்பதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












