சென்னை: இந்தியாவில் டிஜிட்டல் கல்விமுறையைக் கொண்டு வர ஹரியாணா மாநில அரசுடன் கூகுள் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கல்விப் புரட்சியைக் கொண்டு வர கூகுள் முடிவு செய்துள்ளது.
ஹரியாணா மாநிலம் முழுவதும் டிஜிட்டல் கல்வியைப் புகுத்துவதற்கான ஏற்பாடுகளை கூகுள் செய்துள்ளது. இதற்காக சமீபத்தில் ஹரியாணா மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூகுள் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஹரியாணா மாநிலத்திலுள்ள அரசு பள்ளிகள் அனைத்திலும் இணையதளத் தொடர்பு ஏற்படுத்தப்படும்.
அதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படும். டிஜிட்டல் முறையில் கல்வி போதிப்பதற்காக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கையெழுத்திட்டுள்ளார்.
இத்தகவலை கூகுள் இந்தியா நிறுவனத்தின் தலைவர் (கொள்கை) சேத்தன் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதற்காக கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள தகவல் தொழில்நுட்பத்துறை, கூகுளுக்கு உதவுகிறது. அதைப் போலவே அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனமும், கூகுளுக்கு உதவி புரிய முன்வந்துள்ளது.
இந்தத் திட்டம் மூலம் உலகத் தரம் வாய்ந்த கல்வி ஹரியாணா மாநில அரசு பள்ளளி மாணவ, மாணவிகளுக்குக் கிடைக்கும் என்றார் சேத்தன் கிருஷ்ணசாமி.