அமெரிக்காவில், கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், கூகுள் நிறுவனம், தங்களது ஊழியர்களை 2021 ஜூன் மாதம் வரையில் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளும் பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. பொருளாதார அளவில் பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. தொழில் நுட்பத் துறையைப் பொருத்த வரையில், தற்போது 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் இந்நோயினால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு, சிறிது சிறிதாக மீண்டு வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனம், ஊழியர்களின் நலனில் அக்கறைகொண்டு ஆரம்ப காலத்திலேயே வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி அளித்துள்ளது.
தற்போது வரையில், அங்கு நிலமை சீராக நிலையில், கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இதர முக்கிய குழு செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அனைத்து ஊழியர்களும் 2021 ஜூன் மாதம் வரையில் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்துள்ளார்.