சென்னை: பள்ளி மாணவர்களுக்கு பாடத்தோடு கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளையும் பள்ளிகள் போதிக்கவேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் இணைச் செயலரும், சிபிஎஸ்இ இயக்குநருமான(பொறுப்பு) ஒய்.எஸ்.கே. சேஷுகுமார் கூறியதாவது:
தற்காப்புக் கலை என்பது மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஒன்று. அதை பள்ளி நிர்வாகங்கள் முறையே அளிக்கவேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் இந்த புது உத்தரவைப் பிறப்பித்துள்ளோம்.
சமீபத்தில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பெண் குழந்தைகள் கடத்தல், கற்பழிப்பு, மானபங்கம் போன்ற சம்பவங்களால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தரவேண்டியதுள்ளது.
தற்காப்புக் கலைகளையும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கும்போது அவர்கள் தங்களைக் தாங்களே காத்துக்கொள்ள முடியும்.
இந்தியாவில் 17,077 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. இதில் 552 பள்ளிகளில் மட்டுமே தொழில் சார்ந்த வகுப்புகள் உள்ளன என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












