சென்னை: முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர உதவும் கேட்-2016 தகுதித் தேர்வு எழுத விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களளை அனுப்புவதற்கு அக்டோபர் 1 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் மூலம் மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை மாணவ, மாணவிகள் கவனிக்கவேண்டும்.
முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்புடன் படிக்க கேட் தேர்வு உதவுகிறது. இந்தத் தேர்வுக்கு பொறியியல் பட்டதாரி நுண்ணறித் தேர்வு என்றும் பெயர். இந்த ஸ்காலர்ஷிப் பெற இந்தத் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். சில கல்லூரிகள் இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே, முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்த்துக்கொள்கின்றன.
இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.), ஐஐடி நிறுவனங்கள் இணைந்து இந்தத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகின்றன. 2016-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு 2016 ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வுக்கு இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமும் இணைய வங்கிச் சேவை, கடன் அட்டை, டெபிட் கார்டு, இ-சலான் ஆகிய முறைகளில் மட்டுமே செலுத்தவேண்டும். இதுபோல், தேர்வு அனுமதிச் சீட்டையும் இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் இடம்பெறும் 23 தாள்களும் இணையம் மூலம் மட்டுமே எழுத வேண்டும். தேர்வு முடிவுகள் 2016 மார்ச் 19 ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும்.
தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை http:gate.iisc.ernet.in என்ற இணையதளத்தைப் பார்த்து மாணவ, மாணவிகள் அறியலாம்.