மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 23ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, காலாண்டு விடுமுறையும் ரத்து என அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்னும் பெயரில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஓர் சிலத் திட்டங்கள் கல்வியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருந்தாலும் பெரும்பாலான திட்டங்கள் கல்வியின் நோக்கத்தைப் பாதிக்கும், கற்றல் விகிதத்தைக் குறைக்கும் என குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.
பொதுத் தேர்வு
தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தேர்ச்சி என்னும் நடைமுறை இருந்துவந்த நிலையில் சமீபத்தில் இந்த நடைமுறையினை மாற்றம் செய்யப்பட்டது. அதில், 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வினை நடத்த மத்திய அரசு முடிவு செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகமும் இதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
இதுகுறித்து மத்திய அரசின் சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மாநில அரசுகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், காந்தியின் 150-வது பிறந்தநாள் நினைவு விழாவை 2.10.2018 முதல் 02.10.2020 முடிய இரண்டு வருடங்களுக்குக் கொண்டாடப்பட்டு வருவதால் இதனை சீரிய முறையில் செயல்படுத்திய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி
இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவானது நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்கான விழாவை பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடும் வகையில் செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை ரத்து
அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2ம் தேதி வரையிலான நாட்கள் பள்ளி மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களாகும். அந்த நாட்களில் தான் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை இல்லை
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தற்போது நடந்துவருகிறது. காலாண்டு தேர்வு முடிந்து வரும் 23-ம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆதாரங்களை அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு
மேலும், இந்த நாட்களில் பள்ளிகளில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை https://www.gandhi.gov.in (Karyanjali) என்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதனுடைய இணைப்பு அனைத்தையும் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்
மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் திணிக்கப்பட்டு வருவதாக பரவலாகக் கருத்து நிலவிவருகிறது. மேலும், தேர்வுத் திட்டங்கள் மாற்றம், புதியக் கல்விக் கொள்கை உள்ளிட்டு மாணவர்கள் ஏற்கனவே விரக்தியில் உள்ள நிலையில், தற்போது காலாண்டு விடுமுறையும் ரத்து என அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை விளக்கம்
காலாண்டு லீவு ரத்து என்ற அறிவிப்பினை கேள்விப்பட்ட மாணவர்கள் அப்படியே நொறுங்கிபோய் விட்டனர். இந்நிலையில், அதுவெறும் வதந்திதான் என்றும், விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை என 9 நாட்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகளை விருப்பமான பள்ளிகள் நடத்தலாம். அதில் விருப்பமான மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர்.