பஞ்சாப் : எல்கேஜி முதல் பிஹெச்டி வரை படிக்கும் மாணவிகளுக்கு கட்டணமில்லாத கல்வி வழங்க பஞ்சாப் மாநிலம் முன் வந்துள்ளது. முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அதிரடி அறிவிப்பு
மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்மம்மா என கவிமணி தேசி விநாயகம் பிள்ளை கூறியிருக்கிறார். மாதவம் செய்து பிறந்திருக்கும் மங்கையர்களுக்கு மழலை பருவத்தில் இருந்தே கல்வியை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மாநிலம் அறிவித்துள்ளது அருபெருஞ் செயலாகும்.
ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவருக்கு பயனுள்ளதாக இருக்கம். ஒரு பெண் கல்வி கற்றால் அது அந்த குடும்பத்திற்கே பயனுள்ளதாக இருக்கும் என்பர். பஞ்சாப் முதல்வர் பெண்கல்வி, விவசாயிகளின் நலன் என மாநிலத்தின் அனைத்து நலன்களையும் கருத்தில் கொண்டு அறிவித்துள்ள அறிவிப்புகள் மிகவும் வரவேற்கத்தக்கது.
எல்கேஜி முதல் பிஹெச்டி வரை இலவசக் கல்வி
பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் எல்கேஜி முதல் பிஹெச்.டி வரை மாணவிகளுக்குக் கட்டணமில்லாத கல்வி வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார், . இதைப் போலவே, பஞ்சாயத்துத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகித அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். பெண்கள் முன்னேற்றம் குறித்து பல கோரிக்கைகளைத் தனது தேர்தல் வாக்குறுதியாக அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி கல்லூரிகளில் வைஃபை வசதி
பஞ்சாபில் உள்ள 13,000 பள்ளிகளிலும் 48 அரசுக் கல்லூரிகளிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். ஐந்து கல்லூரிகள் புதிதாகத் திறக்கப்படும். மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், ஆங்கில வகுப்புகள் புதிதாக ஆரம்பிக்கப்படும்' என்றும் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
சமூக நலத் திட்டங்கள்
நலிந்தோர்க்கு எளிதாகக் கடன், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, குறைந்த வட்டியில் வங்கிக் கடன், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்களைத் தெரிவிக்கும் வகையில் லோக்பால் மசோதா என்று பல சமூக நலத் திட்டங்கள்குறித்த அறிவிப்புகளைச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்துவருகிறார் அமரீந்தர் சிங்.
சிறு குறு விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி
இவரின் அறிவிப்புகளில் மிக முக்கியமானது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான விவசாய பயிர்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்பதுதான். இதில், சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய இரண்டு லட்ச ரூபாய் வரையிலான கடன்கள் முழுமையாகத் தள்ளுபடிசெய்யப்படும் என்றும், இதர விவசாயிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் அமரீந்தர் சிங்.


Click it and Unblock the Notifications












